தென்பெண்ணை–பாலாறு இணைப்பு திட்டத்தில் செட்டேரி அணையை சேர்க்க விவசாயிகள் கோரிக்கை

தமிழக விவசாயிகள் சங்க மாநாடு வேலூர் மாவட்டம் வெலக்கல் நத்தத்தில் மாணிக்கம் தலைமையில் நடந்தது. மாநில தலைவர் சின்னசாமி, கண்ணைய நாயுடு, கிருஷ்ணமூர்த்தி, நீதிவர்ணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:–
பாலாறு பகுதி மக்களுக்கு பயனுள்ள திட்டமான தென்பெண்ணை – பாலாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்த சட்டமன்றத்தில் அறிவித்து மக்கள் வாழ்வை மேம்படுத்தும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சிக்கு நன்றியை காணிக்கையாக்குகிறோம்.
பாலாறு –தென்பெண்ணை இணைப்பு திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி ஏற்கனவே கிருஷ்ணகிரி அணையிலிருந்து பெரியேரி வரை கிருஷ்ணகிரி அணை தண்ணீர் கொண்டுவரப்பட்டுள்ளது.
அங்கிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செட்டேரி அணைக்கு எண்ராம்பள்ளி ஏரி, நேரலக்கோட்டை வழியாக, ஒப்புதவாடி ஏரியை இணைத்தும் அடுத்து செட்டேரி டேமிற்கு தண்ணீரை கொண்டு வரவாய்ப்புள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்தினால் கத்தெரி கால்வாய் வழியாக பாலாற்றில் தண்ணீர் கலப்பதற்கு வாய்புள்ள நிலையில், வேலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும், விவசாயத்தையும், தாகத்தையும் தீர்க்கலாம். இதனால் தென்பெண்ணை–பாலாறு இணைப்பு திட்டத்தில் செட்டேரி அணையை சேர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது