அரசு மருத்துவமனையில் பிறந்தது ஆணா... பெண்ணா... பணத்துக்காக பாலினத்தை மாற்றும் கொடுமை

மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டில், குழந்தையின் பாலினத்தை தவறாக சொல்லி, பணம் பறிக்கும் கும்பலால் நேற்று, மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதுகுறித்து, பெண்ணின் உறவினர்கள், போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர்.
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த பழனிக்குமாரின் மனைவி தேவிகா,23. இவருக்கு அரசு மருத்துவமனையில் நேற்று மதியம் 3 மணிக்கு குழந்தை பிறந்தது. வார்டுக்குள் தாய் இருந்தபோது, வெளியே இருந்த உறவினர்களிடம் அங்குள்ள பணியாளர்களில் சிலர், "ஆண் குழந்தை பிறந்திருக்கிறது' என்றுக்கூறி, ரூ.500 லஞ்சம் வாங்கினர். பின் ஒருமணி நேரம் கழித்து, "ஆண் குழந்தை என்று தவறுதலாக கூறிவிட்டோம்' எனக்கூறி பெண் குழந்தையை கொடுத்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள், ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, போலீசில் புகார் செய்தனர். பழனிக்குமார் கூறுகையில்,""பணியாளர்கள் தான், முதலில் ஆண்குழந்தை பிறந்தது என்று சொன்னார்கள். அரைமணி நேரம் கழித்து, தவறாக சொல்லிவிட்டோம் என்கின்றனர். எதை உண்மையென நாங்கள் நம்புவது?,'' என்றார். இதுதொடர்பாக, நேற்றிரவு வரை வழக்குப்பதிவு செய்யவில்லை. நிர்வாக ரீதியான விசாரணைக்கு டீன் மோகன் உத்தரவிட்டுள்ளார். 
இது புதிதல்ல: ஒரு மாதத்திற்கு முன், பிரசவ வார்டில் நள்ளிரவில் ஒரு பெண்ணுக்கு பிறந்த, பெண் குழந்தையை, உறவினர்களிடம், "ஆண் குழந்தை பிறந்திருக்கிறது' என்று கூறி 500 ரூபாய் வாங்கியுள்ளனர். 
வார்டுக்கு மாற்றும் போது, "பெண் குழந்தை பிறந்தது' என தெரிவிக்கவே, "பிறந்தது ஆண் குழந்தை தான்' என்று, உறவினர்கள் பிரச்னை செய்தனர். குழந்தை பெற்ற பெண்ணிடம், டாக்டர்கள் நேரடியாக விசாரித்தபின்பே, பிரச்னை முடிவுக்கு வந்தது. இதுகுறித்து ஆக., 11ல் செய்தி வெளியிடப்பட்டது. 
இரண்டு மாதத்திற்கு முன், மதுரை வாடிப்பட்டி பொம்மப்பட்டியைச் சேர்ந்த தினகரன் மனைவி மீனாட்சியின், 22 ஆண் குழந்தையை, மகப்பேறு வார்டுக்குள்ளேயே, ஒரு பெண் கடத்திச் சென்றார். இன்று வரை அக்குழந்தை கிடைக்கவில்லை. 
மதுரை அரசு மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 40 முதல் 50 குழந்தைகள் பிறக்கின்றன. இதில் எத்தனை குழந்தைகள் இப்படி தினந்தோறும் பாலினத்தை மாற்றி கூறப்படுகிறது என்பது தெரியவில்லை. டாக்டர்கள் தான் குழந்தையின் பாலினத்தை சொல்ல வேண்டும். அல்லது பிரசவிக்கும் நேரத்தில் உறவினர் கட்டாயம் இருக்க வேண்டும். இதுகுறித்து சுகாதாரத் துறை பரிசீலிக்க வேண்டும்