மதுரை மாவட்டம் சமயநல்லூர் போலீஸ் சரகம் தேனூர் சுந்தரவள்ளியம்மன் திருக்கோயில் தக்கார் ராஜேந்திரகுமார், சமயநல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:–
மதுரை மாவட்டம் தேனூர் சுந்தரவள்ளியம்மன் திருக்கோயில் மதுரை உதவி ஆணையரின் உத்தரவுபடி தக்கார் நியமனம் செய்யப்பட்டு 4.10.97முதல் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
இந்த கோவிலுக்கு சொந்தமான 221 கிராம் தங்கம், 137 கிராம் வெள்ளி நகைகளை முன்னாள் நிர்வாகி முத்துநாயகம் மகன் சோனைமுத்து வசம் இருந்தது. அதை ஒப்படைக்கும்படி பலமுறை தபால் மூலமாகவும், நேரடியாகவும் கேட்டும் அதை கொடுக்காமல், தருகிறேன் தருகிறேன் என்று சொல்லி ஏமாற்றி வந்தார்.
மேலும் கோவிலுக்கு சொந்தமான நகைகளை மோசடி செய்து மறைத்து வைத்தும் அதை விற்று விட்டதாக தெரிகிறது. தங்க நகை மதிப்பு ரூ.6 லட்சம், வெள்ளி நகை மதிப்பு ரூ.40 ஆயிரம்.
எனவே இது சம்மந்தமாக விசாரணை செய்து அரசுக்கு சுமார் ரூ.6,40,000 இழப்பை ஏற்படுத்தியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரின் மீது சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்–இஸ்பெக்டர் ராஜா ஆகியோர் வழக்கு பதிவு செய்து முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சோனைமுத்துவை வலைவீசி தேடி வருகின்றனர்