பள்ளிகளில் துப்புரவு பணியாளர் நியமன குளறுபடி: அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் சிபாரிசு நீதிபதி காட்டம்

உசிலம்பட்டி கல்வி மாவட்ட பள்ளிகளில் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்கள் நியமனம் அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் சிபாரிசுப்படி நடந்ததாக தாக்கலான வழக்கில், கல்வி அதிகாரிகளிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. 
திருப்பரங்குன்றம் கணேசன் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர் நியமனத்திற்கு, தகுதியானவர்களை வேலை வாய்ப்பு அலுவலகம் 2012 ஜூன் 6 ல் பரிந்துரைத்தது. நேர்காணல் தேர்வில் பங்கேற்க, மேலூர் கல்வி அலுவலர், நேர்காணல் கடிதம் அனுப்பினார். வாட்ச்மேன் பணிக்காக 2012 ஜூன் 14 ல் நேர்காணலில் பங்கேற்றேன். நான் 8 வது வகுப்பு படித்து, 1993ல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். நான் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும். எனக்கு கூடுதல் தகுதி 
இருந்தும், பணி நியமனம் வழங்கவில்லை.
உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 57 பேரை வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்களாக நியமித்தனர். மதுரை, மேலூர், உசிலம்பட்டி கல்வி மாவட்டங்களில் மேற்கண்ட பணி நியமனங்கள் குறித்த பட்டியலை, கல்வி மாவட்ட அலுவலர்களிடம் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரினேன். 
உசிலம்பட்டி கல்வி மாவட்டத்திற்கு மட்டும் பட்டியல் வழங்கினர். அதில் நியாயமற்ற முறையில், அரசியல்வாதிகளின் சிபாரிசுப்படி பணியாளர்களை தேர்வு செய்துள்ளனர். மற்ற இரு கல்வி மாவட்ட அதிகாரிகள் பதில் தரவில்லை. 
உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் சமூக நீதியை தோற்கடித்துள்ளனர். தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களை இத்துடன் இணைத்துள்ளேன். உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்கள் நியமனம் சட்டவிரோதம் என அறிவித்து ரத்து செய்ய வேண்டும். புதிய நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.
நீதிபதி எஸ்.நாகமுத்து முன், விசாரணைக்கு மனு வந்தது. முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் (தற்போது அரசு தேர்வுத்துறை இயக்குனர்), பணியாளர் தொகுதி முன்னாள் இணை இயக்குனர் கண்ணன் 
(தற்போது இடைநிலைக்கல்வி ஆராய்ச்சிக் கல்வி இயக்குனர்), கல்வி மாவட்ட அலுவலர்கள் ஜெயமீனாதேவி 
(மதுரை), சீமான் (மேலூர்), ரவிக்குமார் (உசிலம்பட்டி), உசிலம்பட்டி கல்வி மாவட்ட அலுவலக "டெஸ்க்' கண்காணிப்பாளர் மாயன் ஆஜராயினர். மனுதாரர் தரப்பில் 
வக்கீல் எஸ்.பாலமுருகன் 
ஆஜரானார்.
உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில், பணி நியமன ஆவணங்களை நீதிபதி ஆய்வு செய்தார். அதில்,"எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர் பரிந்துரைப்படி பணி நியமனம் மேற்கொள்ள வேண்டும்,' என, ஒரு குறிப்பு இருந்தது. இதை போன் தகவல் அடிப்படையில் எழுதியது யார்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மாயன்: பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகத்திலிருந்து 2012 ஜூலை 26 ல் வந்த போன் தகவல் அடிப்படையில் எழுதினேன்.
நீதிபதி: உண்மையைக் கூறுங்கள்; சட்டப்படி எல்லாம் நடக்கும். கற்பனையாக நீங்களே எழுதி விடுவீர்களா? இது சாதாரண துப்புரவு பணியாளர்கள் நியமனம் தொடர்பானது. இதைப் பார்க்கையில், நாட்டில் சட்டத்தின் ஆட்சி உள்ளதா? என கேட்கத் தோன்றுகிறது. போனில் பேசியது ஆண் குரலா? பெண் குரலா? 
மாயன்: தெரியவில்லை.
நீதிபதி: பணி நியமனம் தொடர்பாக மதுரை, மேலூர் கல்வி மாவட்ட அலுவலர்கள் ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளனர். சிலவற்றை மறைத்துள்ளனர். தில்லுமுல்லு நடந்துள்ளது. இதை சாதாரணமாக எடுக்க முடியாது. மாநில போலீஸ் விசாரித்தால் சரியாகாது. சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டி வரும். மனுதாரருக்கு தகவல் உரிமைச் சட்டம் நன்றாக பயன்பட்டுள்ளது. கல்வி அதிகாரிகளின் பதில், பதிவு செய்யப்படுகிறது. அரசு வக்கீல், கல்வி அதிகாரிகளிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும். விசாரணை செப்., 6க்கு தள்ளிவைக்கப்படுகிறது, என்றார். 
தகவல் உரிமை சட்டத்தால் 
வெளியான உண்மை: துப்புரவு பணியாளர் நியமனத்திற்கு 38 பேர் தேர்வான விபரத்தை, தகவல் சட்டத்தின் கீழ் உசிலம்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் வழங்கிய பட்டியலை மனுதாரர் வக்கீல் தாக்கல் செய்தார். அதில் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள், கூட்டுறவுத்துறை அமைச்சர், மதுரை வடக்குத் தொகுதி, மதுரை தெற்கு, உசிலம்பட்டி, திருமங்கலம் எம்.எல்.ஏ.,க்கள், மதுரை மாவட்டச் செயலாளர் சிபாரிசுப்படி தேர்வு செய்யப்பட்டவர்கள் (16 பேர்) என தனித்தனியாக பிரித்து பட்டியலிடப்பட்டுள்ளது.