சைக்கோ கொலையாளி ஜெய்சங்கர் தப்பி ஓட்டம்: தமிழக–கர்நாடக எல்லையில் உள்ள கிராமங்களில் போலீசார் விசாரணை

சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த காமக்கொடூரன் ஜெய்சங்கர் (வயது 36) பெங்களூர் சிறையில் இருந்து தப்பி சென்றான். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவனைப்பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு தரப்படும் என்று கர்நாடக போலீஸ் மந்திரி ஜார்ஜ் அறிவித்து உள்ளார். அவனை பிடிக்க பெங்களூர் குற்றப் பிரிவு இணை கமிஷனர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தனிப்படை போலீசார் தமிழக போலீசாரை தொடர்பு கொண்டு அவனை தேடி வருகிறார்கள். பெங்களூர் அருகே தமிழக– கர்நாடக எல்லையில் உள்ள கிராமங்களில் போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சைக்கோ கொலையாளி ஜெய்சங்கர் என்றும் செல்லமாக சங்கர் என்றும் அழைக்கப்பட்டு வந்த இவனது சொந்த ஊர் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகில் உள்ள கோனசமுத்திரம் வழி கன்னியாம்பட்டி காட்டு வளவு ஆகும்.
இவனுக்கு பரமேஸ்வரி (வயது 32) என்ற மனைவியும், ஜமுனாதேவி, தேன்மொழி, ஹேமாவதி என்ற மகள்களும் உள்ளனர். குமார் என்கிற செல்வக்குமார் என்ற அண்ணனும், வெங்கடேஸ்வரி என்ற அக்காளும் உள்ளனர். பிளஸ்–2 வரை படித்துள்ள ஜெய்சங்கர், முதலில் மினி பஸ் டிரைவராக பணியாற்றினார். பின்னர் லாரி டிரைவராக மாறினார்.
ஜெய்சங்கர் கொங்கணா புரத்தில் மினி பஸ் டிரைவராக பணியாற்றிய போது, அவருக்கும், கொங்கணாபுரத்தை சேர்ந்த மகளிர் மன்ற தலைவியும், சுய உதவி குழு தலைவியுமான இந்திராகாந்தி (வயது 32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் திருமணம் ஆனவர். இவருடன் ஜாலியாக ஊர் சுற்றி வந்த ஜெய்சங்கருக்கும், இந்திராகாந்திக்கும் தகராறு ஏற்பட்டது. ஜெய்சங்கரை திருமணம் செய்து கொள்ள இந்திராகாந்தி வற்புறுத்தி வந்தார். இதனால் கோபம் அடைந்த ஜெய்சங்கர், இந்திராகாந்தியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை சங்ககிரி போலீஸ் நிலையம் அருகில் உள்ள பகுதிக்கு அழைத்து சென்று கற்பழித்து தாக்கி கொன்றார்.
பின்னர் இந்திராகாந்தி அணிந்து இருந்த தாலி, தோடு, செல்போனை திருடி கொண்டு தப்பி சென்று விட்டார். இது தான் ஜெய்சங்கர் செய்த முதல் கொலை ஆகும். இந்திரா காந்தி கொடுத்த தொந்தரவு ஜெய்சங்கருக்கு பெண்களை பிடிக்காமல் போனது. இதனால் பெண்களை கண்டால் அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. சேலம், ஈரோடு, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் பல பெண்களை கற்பழித்து கொன்றான்.
இவன் தனியே வரும் பெண்கள் அல்லது வீடுகளில் தனியே இருக்கும் பெண்களை தாக்கி கொன்று பணம், நகைகளை திருடும் குணம் கொண்டவன். பெண்களை பிடித்து கொண்டதும் அவர்களின் கழுத்தை கத்தியால் அறுப்பான். இதனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடுவார்கள். இந்த நேரத்தில் அவன் அவர்களை கற்பழித்து நகைகளை திருடி கொண்டு தப்பிவிடுவான். இவன் ஒரு மனநோயாளி. இவன் வெளியில் இருந்தால் பெண்களுக்கு ஆபத்து. எந்த நேரத்திலும் பெண்களை அவன்தாக்கி கொல்வான். இவனை பார்த்தாலோ, அல்லது இருக்கும் இடம் தெரிந்தாலோ உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தெரிவியுங்கள் என்றும் கர்நாடக – தமிழக போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.
காமக்கொடூரன் ஜெய்சங்கர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான். முதலில் தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்தான். அப்போது அவனுக்கு தமிழக சிறைகளில் கடும் பாதுகாப்பு போடப்பட்டு இரவு – பகலாக கண்காணிக்கப்பட்டான். ஆனால் பெங்களூர் சிறையில் அவன் சிறை அதிகாரிகள், சிறை ஊழியர்களிடமும், மற்ற கைதிகளிடமும் சகஜகமாக பழகி வந்தான். இதனால் அவன் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இருப்பினும் இவனைப்பற்றி தமிழக போலீசார் பெங்களூர் சிறை அதிகாரிகளிடம் ஜெய்சங்கரிடம் உஷாராக இருங்கள் என எச்சரித்து வந்தனர்.
இதையடுத்து ஜெய் சங்கர் தனிச்சிறையில் அடைக்கப்பட்டான். தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் போன்றவர்களை அடைக்கும் தனிச் சிறையில் அவன் அடைக்கப்பட்டு இருந்தான். இதனால் அவனுக்கு கோபம் அதிகரித்தது. தன்னை தனிமைச்சிறையில் அடைத்த கர்நாடக சிறைத்துறை அதிகாரிகளை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாடகம் ஒன்றை அரங்கேற்றினான். உடல் நிலை சரியில்லாதது போல் நாடகம் ஆடி அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு பாதுகாப்புடன் சென்று சிகிச்சை பெற்று வந்தான். அப்போது அவனை சந்திக்க வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் சிறையில் இருந்து தப்பிக்கும் யோசனையை கூறி இருக்கிறான். அதற்கு அவர்கள் அவன் கேட்ட சிறு உதவிகளை செய்து கொடுத்துள்ளனர். இதன்மூலம் அவன் பெங்களூர் சிறையில் இருந்து தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
மேலும் அவன் கடந்த சில நாட்களாக பெங்களூர் சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் படுத்து சிகிச்சை எடுத்து வந்தான். இங்கு சிகிச்சை பெற்று கொண்டே இவன் தப்பி செல்ல திட்டம் வகுத்துள்ளான். மின்சாரம் தடைபடும் நேரத்தில் தப்பி செல்ல திட்டமிட்டு இதற்கான நேரத்தை எதிர்பார்த்து இருந்துள்ளான். சம்பவத்தன்று இரவு பெங்களூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த நேரத்தில் மின்தடை ஏற்பட்டது. இதை பயன்படுத்தி கொண்ட ஜெய்சங்கர், சிறை ஆஸ்பத்திரியில் இருந்து வெளியில் வந்து 3சுவர்களை தாண்டி தப்பி உள்ளான். இவன் சுவர்களில் ஏறி தப்பியபோது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த ரத்தம் சிறையில் வெளிப்பகுதியில் கொட்டி கிடந்தது. இதை பார்த்த ரோந்து போலீசார் சிறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். பின்னரே கைதி ஜெய்சங்கர் தப்பி சென்றது தெரியவந்தது.
இவனது ரத்தக்கறையை வைத்து போலீஸ் மோப்ப நாய்கள் வரவைத்து மோப்பம் பிடிக்க விடப்பட்டது. இந்த நாய்கள் பெங்களூர் முழுவதும் சுற்று வந்தது. தேசிய நெடுஞ்சாலையில் ஒரு இடத்தில் போய் படுத்துக் கொண்டது. இதனால் அங்கிருந்து லாரி அல்லது பஸ்சில் அவன் தப்பி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
இதனால் இவன் எங்காவது ஒரு கிராமத்தில் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
ஜெய்சங்கர் சாப்பாடு இல்லாமல் எத்தனை நாட்களும் பசி பட்டினியுடன் இருப்பான். கோர்ட்டுக்கு அழைத்து வந்த போது சேலத்தில் போலீசாரை ஏமாற்றி ஜெய்சங்கர் தப்பி சென்றான். இவனை கோவையை சேர்ந்த போலீசார் அழைத்து வந்து இருந்தனர். இவனை இவர்களும், சேலம் போலீசார் தேடினர். எங்கும் அவன் இல்லை.
பின்னர் இவன் கர்நாடகாவில் பல மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டான். அப்போது இவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்தான். அதில், சேலத்தில் தான் தப்பி சென்றதும் எங்கும் செல்லாமல் பஸ்நிலையம் அருகில் உள்ள ஒரு பாலத்திற்கு அடியில் ஒரு இரவு, ஒரு பகல் என்று அங்கேயே பதுங்கி இருந்தேன். பிறகு வெளியில் வந்து மேச்சேரிக்கு சென்று அங்கிருந்து லாரி மூலம் பெங்களூர் சென்று பதுங்கி கொண்டேன் என்று தெரிவித்து இருந்தான்.
இவன் தப்பி சென்றதால் கோவை போலீஸ் ஏட்டு தன்னை உயர் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்து விடுவார்கள் என எண்ணி தற்கொலை செய்து கொண்டார். பல பெண்களை கொலை செய்த ஜெய்சங்கர் போலீஸ் ஏட்டு தற்கொலைக்கும் காரணம் ஆனவன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்சங்கர் பல நாட்கள் சாப்பிடாமல் பதுங்கி இருப்பான் என்பதால் இவன் பெங்களூரில் இருந்து ஓசூர் வரை உள்ள அனைத்து பாலங்களிலும், அருகில் உள்ள கிராமங்களில் உள்ள வீடுளிலும் போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். சிறிய சிறிய கிரா மங்களுக்கும் போலீசார் சென்று ஜெய்சங்கர் பற்றி விளக்கமாக கூறி அவனை பற்றி தகவல் கொடுங்கள் என்று மைக்கில் கூறி வருகிறார்கள்