வேலூர் மாநகராட்சி 34–வது வார்டு பில்டர்பெட் ரோட்டில் பாருடன் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
இந்த கடையில் மது குடிப்பவர்கள் பெண்களை கேலி செய்கிறார்கள். அருவறுப்பாக பேசுகிறார்கள். வழிப்பறி, திருட்டு அதிகரித்து வருகிறது என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தினர். அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் கடை அகற்றபடவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், கவுன்சிலர் அயூப்கான் தலைமையில் டாஸ்மாக்கடை முன்பு இன்று திரண்டனர். கடையை மூடக்கோரி முற்றுகையிட்டனர். பின்னர் கடை முன்பு அமர்ந்து கோஷம் எழுப்பினர்.
வேலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுபற்றி தகவலறிந்த டாஸ்மாக் மேலாளர் மகேஸ்வரி சம்பவ இடத்துக்கு சென்றார். அவரையும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர் பொதுமக்களை சமாதானம் செய்தார்.
அப்போது அங்குள்ள பார் அனுமதியின்றி இயங்கியது தெரியவந்தது. உடனே நடவடிக்கை எடுத்து பாருக்கு மேலாளர் மகேஸ்வரி சீல் வைத்தார். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது